Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Monday, 7 February 2011

கிராமப்புற கல்விக்கு உதவும் கூகுள்


இணையதள உலகின் முன்னணி தேடுதல் நிறுவனமான "கூகுள்', இந்தியாவில் உள்ள பின் தங்கிய கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ முன்வந்துள்ளது. பார்தி பவுண்டேஷன் எனும் தனியார் அமைப்பு பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்திரபிரேதசம் ஆகிய மாநிலங்களின் கிராமப்புறங்களில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்தி வருகிறது.


இது ஏழை மாணவர்களுக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட பள்ளிகளாகும். இதில் 50 பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக "கூகுள்' நிறுவனம் 25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கல்வி மற்றும் சுகாதார உதவிகளுக்காக கூகுள் ஆண்டுதோறும் 750 கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்நிறுவனம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.


இதே போல நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்கள் பலவும் கிராமப்புற பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவிட முன்வர வேண்டும் என்றும், இதனால் கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பெருமை இந்நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்றும் கல்வியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

Monday, 31 January 2011

அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக்கல்வி : பிளஸ் 2 வரை நீட்டிப்பு


நாட்டில் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அனைவரும் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு "அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக்கல்வி' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டம் இந்தாண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு குறைந்தபட்ச கல்வியறிவு இதன் மூலம் கிடைக்கிறது.


இந்நிலையில் இந்த உன்னதமான திட்டத்தை பிளஸ் 2 வரை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.  ஏனெனில் 60 சதவீத மாணவர்கள் எட்டாம் வகுப்புடன் தங்களது கல்வியை முடித்துக் கொள்கின்றனர். இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது.


புதிய திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மையை பெருமளவுக்கு குறைக்க முடியும். மேலும் இனிவரும் சந்ததியினர் அனைவரும் குறைந்தபட்ச கல்வியாக "பிளஸ் 2 படித்தவர்கள்' என்ற நிலையை அடையலாம். இருந்தாலும் தற்போதைய திட்டத்துக்கும் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இப்புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

-

-