Monday 7 February 2011

ஞாபக மறதியா? கவலையே வேண்டாம்..


இது தேர்வுகாலம். அனைவருக்கும் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும், முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற பெரிய ஆர்வம் இருக்கும். 

மாணவர்களாகிய நீங்கள் இந்த நோக்கத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு படித்துக் கொண்டிருப்பீர்கள். தூக்கம் தொலைத்து, பசியை தொலைத்து, விளையாட்டை தொலைத்து, பொழுதுபோக்கை தொலைத்து உங்களின் முழு கவனமும் பாடப் புத்தகங்களில் பதிந்திருக்கும்.

என்னதான் கஷ்டப்பட்டு படித்தாலும், தேர்வு எழுதும்போது படித்தது தடையின்றி நினைவிற்கு வந்தால்தான், சிறப்பாக எழுதி, மதிப்பெண்களை வாரிக் குவிக்கலாம். எனவே மாணவர்களுக்கு ஞாபக சக்தி என்பது மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. சிறப்பான ஞாபக சக்தியே மதிப்பெண்களை அள்ளித்தரும் வள்ளலாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் ஞாபக சக்தி இருக்கிறது. ஆனால் அளவுகள் மாறுபடலாம். நம்முடைய ஞாபக சக்தி எப்படி வேலைசெய்கிறது என்பதை இங்கே விஞ்ஞான முறையில் அலச முயன்றுள்ளோம். இதன்மூலம் நாம் நம் ஞாபகத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கவனித்தல் மற்றும் தேர்ந்தெடுத்தல்:
பார்த்தல், கேட்டல், நுகர்தல் மற்றும் தொடுதல் உள்ளிட்ட பலவகை உணர்வுகளின் மூலமாகவே நாம் பல அடிப்படையான தகவல்களைப் பெறுகிறோம். மேலும் உணர்வுகளின் மூலமாக, எண்ணற்ற தகவல்கள் எல்லா நேரத்திலும் நமக்கு கிடைக்கின்றன. எனவே நாம் இத்தகைய கணக்கற்ற தகவல்களிலிருந்து, எதை நினைவில் வைக்க வேண்டும், எதை ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.


குறியீடாக்குதல்:
நினைவில் வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை குறியீடாக மாற்றுவதுதான் இந்த நிலை. ஒலியின் அடிப்படையில்(அக்கவுஸ்டிக் குறியீடு), தோற்றத்தின் அடிப்படையில்(விஷுவல் குறியீடு) மற்றும் அர்த்தத்தின் அடிப்படையில்(செமன்டிக் குறியீடு) குறியீடாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. நீங்கள் எந்த வகையில் குறியீடாக மாற்றுகிறீர்களோ, அந்த வகையிலேயே நினைவூட்டல் நடைபெறுகிறது.

சேகரிப்பு:
தகவல்களை நினைவில் சேகரிக்கும் நிலைதான் இது. நினைவானது குறுகியகால நினைவு மற்றும் நீண்டகால நினைவு என்று 2 வகைப்படும். குறுகியகால நினைவானது, மிக சுருக்கமான காலத்தில், அதாவது ஒரு தொலைபேசி எண்ணை நீங்கள் டயல் செய்யும் வரை நீடிக்கும். டயல் செய்தவுடன் அது மறந்துவிடும். இந்த நினைவுத் திரட்டில் குறைந்தளவு தகவல்கள், குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். குறுகியகால நினைவை நீண்டகால நினைவாக மாற்றும் செயல்பாட்டில், மீண்டும் மீண்டும் செய்தல் (தொலைபேசி எண்ணை திரும்ப திரும்ப பயன்படுத்துதல்) முறைக்கு அல்லது கடந்தகால நினைவுடன் இணைக்கப்படுதல் அல்லது ஒரு தகவலை தொடர்ச்சியாக பயன்படுத்துதல்(ஒரு பாடத்தை தினமும் சிறிதுநேரம் படிக்கும்போது, அதை புரிந்துகொள்வது எளிதாகிறது) ஆகிய நிலைகளுக்கு மாற்றப்படுகிறது.


தேவைப்படும்போது நினைவுபடுத்துதல்:
இது நினைவுபடுத்துதலைக் குறிக்கிறது. குறியீடாக்கும் பணியில் ஒரு நிலையான முறையை பின்பற்றினால் நினைவுபடுத்துதல் எளிதாக இருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு தகவலை குறியீடாக்கும் பணியில் ஒலி அடிப்படையை பயன்படுத்தியிருந்தால், அதே குறியீட்டு அடிப்படையை பயன்படுத்தி எளிதாக நினைவிற்கு கொண்டுவரலாம். ஆனால் துரதிஷ்டவசமாக, பல மாணவர்கள் குறியீட்டுக்கு ஒரு அடிப்படையை பயன்படுத்திவிட்டு, நினைவுபடுத்தலுக்கு வேறொரு அடிப்படையை பயன்படுத்துகின்றனர். இதனால் விஷயம் எளிதில் நினைவிற்கு வருவதில்லை.

நினைவக செயல்பாடானது 4 வகைகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்த வகைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நமக்கு தேவையானதை நினைவில் வைத்துக்கொள்ள, தேர்ந்தெடுத்தல் அவசியமாகிறது. நமது தேர்ந்தெடுத்தல் செயல்பாடு நேர்மறையாகவோ அல்லது சரியாகவோ அமையவில்லை என்றால், பல தேவையற்ற தகவல்கள் சேமிக்கப்பட்டு விடும். ஒரு மாணவர் என்ற முறையில் தேர்வுக்காக தகவல்களை நினைவுபடுத்த விரும்பினால், விஷயங்களை நாம் தேர்ந்தெடுப்பதானது திட்டமிட்டபடி இருக்க வேண்டும்.

நினைவு - கோப்பு(பைல்) படுத்துதல் செயல்பாடு:
நினைவுபடுத்தல் செயல்பாட்டை நாம் எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், நாம் அதை கோப்பு(பைல்) பராமரிப்பு முறையுடன் ஒப்பிடலாம். கோப்பாக்க செயல்முறையில், பின்னால் தேவையானவற்றை பெற, தற்போது முறைப்படி, வகைப்பிரித்து வைக்கிறோம். பின்னர் தேவைப்படும்போது தேவையான பிரிவில் தேடி ஒரு தகவலை எளிதாக எடுத்துக் கொள்கிறோம். அதுபோலத்தான் மூளை செயல்பாடு. தேர்வு எழுதும்போது நமக்கு தேவையான விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை எனில், படித்ததை நாம் முறைப்படி பதிவுசெய்து வைக்கவில்லை என்று அர்த்தம். (அதாவது வருடம் சம்பந்தமான விஷயத்தை பிற வருடங்களோடு பொருத்தி பார்த்து வகைப்படுத்தியும், சம்பவங்களை தனியாக வகைப்படுத்தியும், பிறப்பு-இறப்புகளை தனியாக பொருத்தி வகைப்படுத்தியும் வைத்தால் நினைவுபடுத்துவது எளிது)


நினைவக அமைப்பு:
தகவல்களை குறியீடாக்குதல் செயல்முறையை மாணவர்கள் தெளிவாக செய்தால், தேர்வின்போது அவற்றை நினைவுபடுத்தல் மிகவும் எளிது. பலவிதமான அனுபவங்களின் மூலம் விஷயங்களை இணைக்கலாம். ஒருவர் தகவல்களை ஒற்றைக் குறியீட்டு முறையில் பதிவுசெய்தால், அவற்றை மீண்டும் நினைவுபடுத்துவது சிக்கலாக இருக்கும். பலவித தகவல்களின் இணைப்புகள் வழியாக ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டால், நினைவுபடுத்தல் எளிதாக இருப்பதோடு, அதிககாலம் நினைவில் வைக்கவும் முடியும் (அதாவது ஒரு விஷயத்தை தனித்து நினைவில் வைத்துக்கொள்வதை விட, அதனோடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களோடு அதை பொருத்தி, சங்கிலி இணைப்பைப் போல நினைவில் வைத்துக்கொண்டால், ஒன்று மற்றொன்றை தூண்டி, தேவைப்படும் விஷயமானது நமக்கு எளிதில் நினைவுக்கு வந்துவிடும்). இதனால் தேர்வுகளை சிறப்பாக மாணவர்கள் எழுத முடியும்.

மாறுபட்ட நினைவாற்றல்கள்:
சிலருக்கு சிறந்த நினைவாற்றல் இருக்கலாம், சிலருக்கு அது மிகவும் குறைவாக இருக்கலாம். அதிக நினைவாற்றல் உள்ளவர் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்றோ, குறைந்த நினைவாற்றல் உள்ளவர் சபிக்கப்பட்டவர் என்றோ மாணவர்கள் நினைக்கக்கூடாது. சிறப்பான நினைவாற்றல் என்பது நன்றாக கவனித்தல், மதிப்பிடுதல் மற்றும் பயிற்சி ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது. உடலின் மற்ற செயல்பாடுகளைப் போலத்தான் நினைவாற்றலும். எனவே நீங்களும் மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டால், தேர்வு சமயத்தில் மட்டுமின்றி எப்போதும் சிறப்பான பலன்களை பெற முடியும். அனைவருக்குமே நல்ல நினைவுத்திறன் உண்டு. ஆனால் நாம் அவற்றை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது.


நினைவாற்றலை மேம்படுத்தல்:
சில மாணவர்கள் குறிப்பிட்ட மருந்துகளின் மூலம் ஞாபக சக்தியை அதிகப்படுத்தலாம் என்று தீவிரமாக நம்புகின்றனர். பல மருந்து நிறுவனங்கள் தங்களின் வியாபார நோக்கத்திற்காக செய்யும் பிரச்சாரமே இது. மருந்துகளை சாப்பிட்டு யாரும் சிறந்த நினைவாற்றலைப் பெற்றதாய் ஆதாரமில்லை. நமது உணவு முறையில் அக்கறை காட்டாது, பலவித காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது பொதுவாக மூளை செயல்பாட்டை பாதிக்கும். எனவே முறையான மற்றும் சீரான உணவுப்பழக்கமே சிறந்த நினைவாற்றலுக்கு உதவும். மேலும் தேர்வுக்கு படிக்கும்போது மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் டென்ஷன் ஆகியவையும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த டென்ஷனை நேர்மறை சிந்தனை, தியானம் போன்றவற்றால் கட்டுப்படுத்தலாம்.

ஹோமியோபதி, மலர்மருந்துகள், ஆயுர்வேதா, சித்தா போன்ற மருத்துவ முறைகளில் நினைவாற்றலை அதிகரிப்பதற்கான சிறந்த மருந்துகள் உள்ளதாக பல தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதேசமயம் மருந்துகளை நம்புவதைக் காட்டிலும் முறையான சிறந்த உணவுமுறையும், தியானமுமே நமக்கு உதவும்.

இவைத்தவிர நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான பலவித எளிய மூளை விளையாட்டுகளும் உள்ளன. அவற்றில் நீங்கள் ஈடுபடுவதன் மூலமாகவும் உங்களின் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளலாம்.

No comments :

-

-